காலவரையின்றி இந்தியாவில் தங்க பாக். பாடகர் அட்னன் சமிக்கு அனுமதி
டெல்லி: இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் அட்னன் சமிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தான் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி தர வேண்டும் என்று சமி விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு லோக்சபாவில் தெரிவித்தார். அவரை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் நாடு கடத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

46 வயதான சமி, கடந்த மே 26ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தார். அதில் மனிதாபிமான அடிப்படையில் தான் இந்தியாவில் தொடர்ந்து தங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். சமி அடிப்படையில் பாகிஸ்தான் குடிமகன் ஆவார்.
இந்த கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அரசு, சமி காலவரையின்றி இந்தியாவில் தங்கலாம் என அனுமதி அளித்துள்ளது.
லாகூரில் பிறந்தவரான அட்னன் சமி கான், 2001ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி விசிட்டர் விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து விசாவைப் புதுப்பித்து வருகிறார். ஆனால் இவரது பாஸ்போர்ட் 2010ம் ஆண்டு மே 27ம் தேதி காலாவதியானது. அதைப் புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. இதனால் அவர் இந்திய அரசின் உதவியை நாடினார். மனிதாபிமான அடிப்படையில் தான் தொடர்ந்து தங்க அனுமதி கோரினார். தற்போது அந்த அனுமதி தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications