பிரிவினைவாதிகளுடன் பாக். பேச்சுவார்த்தை நடத்தியது ஏமாற்றம் அளிக்கிறது: பிரதமர் மோடி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியது ஏமாற்றம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் தூதர் திடீரென பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனால் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இந்திய அரசின் செயல், ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானுடனான அமைதியை நிலைநாட்டவே இந்தியா விரும்புகிறது. அந்நாட்டுடன் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது.
பாகிஸ்தானுடன் தற்போது நிலவும் எந்த பிரச்சனை குறித்தும் இந்தியா ஆலோசனை நடத்த தயாராக உள்ளது. அதில் எந்த தயக்கமும் இல்லை.
டெல்லியில் எனது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தது மிகவும் நல்ல சந்திப்பு. அப்போது, உறவுகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதை ஆராய்வதற்காக வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திக்க வேண்டும் என்று இருவரும் சேர்ந்துதான் முடிவு செய்தோம்.
இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது மாயபிம்பத்தை ஏற்படுத்துவதாகும். தீவிரவாதம் மற்றும் வன்முறையிலிருந்து விடுபட பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையே தற்போது தேவை.
பேச்சுவார்த்தை விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சிகள் தொடரும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.