இந்திய மீனவர்கள் 18 பேரை சிறை பிடித்தது பாகிஸ்தான் கடலோர காவல்படை
அகமதாபாத்: இந்திய மீனவர்கள் 18 பேரை பாகிஸ்தான் கடலோரக் காவல் படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 படகுகளை பாகிஸ்தானின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பினர் பிடித்துச்சென்றதாக தேசிய மீனவர் பேரவையின் செயலாளர் மணிஷ் லோத்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 18 மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படையினர், திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு சென்று, அதன் பிறகு சிறையில் அடைத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததாக அதே பகுதியில் இருந்த பிற மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.