உலகின் ஆபத்தான நாடு! லண்டன், ரஷ்யாவிலும் நாசவேலையில் ஈடுபட்ட பாக். பயங்கரவாதிகள்! பகீர் ரிப்போர்ட்
டெல்லி: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், மத்திய அரசு அந்நாடு மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அரசு கடந்த பல காலமாகவே பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் அடைக்கலம் அளிப்பதில் சாதனை படைத்துள்ளது என்றும் உலகின் மிகவும் ஆபத்தான சக்திகளில் ஒன்றாக இருப்பதாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பதிலடி கொடுக்கும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியா பதிலடி
இத்தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. முதலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிலடி தொடர்பாக அனைத்து முடிவுகளை எடுக்கவும் ராணுவத்திற்குப் பிரதமர் மோடி முழு சுதந்திரத்தை அளித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு உதவி
இது ஒரு பக்கம் இருக்க பாகிஸ்தான் கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்குச் செய்து வரும் உதவிகள் தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக 2011ல் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் கொன்றிருந்தது. பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் அவர் அபோட்டாபாத்தில் வசித்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் உள்ளிட்டோரின் கடந்த கால நேர்காணல்களை நாம் கவனித்தால் அவர்களே பல இடங்களில் பாகிஸ்தான் அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.. பயங்கரவாத நிதியுதவி குறித்துக் கேட்டபோது, தனது நாடு அமெரிக்காவிற்காக இத்தனை ஆண்டுகள் சில மோசமான வேலைகளைச் செய்ததாகக் கூட ஒரு பாகிஸ்தான் அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா முதல் லண்டன் வரை
2008 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் காபூலில் உள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதல்கள், 2024இல் மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல் மற்றும் 2005இல் லண்டன் குண்டுவெடிப்புகள் என பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாத குழுக்கள் உலகெங்கும் நாசவேலையில் நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தீவிரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் பாகிஸ்தான் தொடர்பு தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். இதன் காரணமாகவே பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தனக்கும் அந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறுவதை இந்தியா ஏற்கும் மனநிலையில் இல்லை.

உண்மை என்ன
கடந்த பல ஆண்டுகளாகவே தெற்காசியா முழுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது என்பதே உண்மை. பாகிஸ்தான் அதன் நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்குப் பல பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியும் அளிக்கின்றன.. கடந்த பிப்ரவரி 2019இல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இதுபோன்ற பயிற்சி முகாம்களிலேயே பயிற்சி பெற்றிருந்தனர். மூளைச்சலவை செய்வது முதல் ஆயுதப் பயிற்சி, தற்கொலைப் படை தாக்குதலுக்கு ரெடியாவது வரை எல்லாப் பயிற்சியும் இங்குதான் அளிக்கப்படுமாம்.
பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து ஆதரிப்பதிலும், உலகளவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதிலும் பாகிஸ்தானின் பங்கு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரிப்போர்ட்டை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தான் சில பயங்கரவாத குழுக்களுக்குத் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருவதாக அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் தாக்குதல்
காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த பஹல்காம் தாக்குதல் நாட்டையே உலுக்கிப் போடுவதாக இருந்தது. அங்குச் சுற்றுலாவுக்குச் சென்ற அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களிலும் எல்லையில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தான் மோதல் நடக்கும். ஆனால், இந்த முறை முதல்முறையாக அப்பாவி மக்கள் மீது மிகப் பெரியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பைசரன் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் இறங்கிய தீவிரவாதிகள், அப்பாவி பொதுமக்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர்.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நிஜமாகவே நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்திருந்தது. பாகிஸ்தானின் நதி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது சரியான பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

உமர் அப்துல்லா
முன்னதாக இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, "இந்தத் தாக்குதலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோர நான் விரும்பவில்லை. எனது அரசியல் அவ்வளவு மலிவானது இல்லை. மாநில அந்தஸ்து பற்றி நாங்கள் கடந்த காலத்தில் பேசியுள்ளோம், எதிர்காலத்திலும் பேசுவோம். ஆனால் நான் இப்போது அதைக் கேட்டால் எனக்குத் தான் அது அவமானம். இது அரசியல் செய்யும் சூழல் இல்லை. பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவை வழங்குவதற்கான நேரம்.
மன்னிப்பு கேட்க வார்த்தையே இல்லை
காஷ்மீரில் பாதுகாப்புத் துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.. ஆனால் முதல்வர் என்ற முறையிலும் சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையிலும் நான் தான் அவர்களை வரவேற்றேன். நமது விருந்தினர், பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வது எனது பொறுப்பு. ஆனால், நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்கு மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
இந்த நாசவேலை செய்தோர் ஏதோ எங்களுக்காக இதைச் செய்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இதைக் கேட்டோமா? 26 பேரையும் கொலை செய்யச் சொன்னோமா? இதற்கு இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் யாரும் உடன்படவில்லை. இதன் காரணமாகவே காஷ்மீர் முழுக்க இந்தத் தீவிரவாத செயலுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது" என்றார்.
பதிலடி தேவை
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்ஐஏ விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் பாகிஸ்தான் நாட்டிலும் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தியா இறங்கி அடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications