பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் காலைத் தொட்டுக் கும்பிட்டதால் 'ரிலீஸ்' செய்யப்பட்ட குற்றவாளி!
பைரேலி: உத்திரப்பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு தண்டனையாக பாதிக்கப்பட்ட பெண்ணின் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொல்லி பஞ்சாயத்தார் தீர்ப்பு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பைரேலியில் மீர்குஞ்ச் வனப்பகுதியில் எம்ஜிஎன் ஆர் இ ஜிஎஸ் புராஜெக்டில் பணி புரிந்து வருபவர் 30 வயது பெண் ஒருவர். கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் அப்பெண்ணை கடந்த மாதம் 28ம் தேதி ரோடாஸ்க்(32) என்பவர் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அப்பெண் மிரட்டப்பட்டுள்ளார்.
ஆனால், மிரட்டலுக்கு அஞ்சாத அப்பெண் நீதி வேண்டி மீர்கஞ்ச் போலீசில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், புகாரை வாங்க மறுத்த கான்ஸ்டபிள், இது தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்தாரிடம் முறையிடச் சொல்லியிருக்கிறார்.
உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே பஞ்சாயத்துக் கூட்டப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதத்தைத் தொட்டு, ரோடாஸ்க் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், இந்த விவகாரத்தை எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.