சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபட வேண்டாம்: அமைச்சர் பரமேஷ்வர்
பெங்களூரு: சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரியில் இருந்து செப்டம்பர் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள தமிழர்களின் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. லாரி, பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்நிலையில், பாதுகாப்பிற்காக கர்நாடக அரசு 15 ஆயிரம் போலீசாரை குவித்துள்ளது. மேலும் மத்தியப் படைகளும் பெங்களூரில் களமிறக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து, மக்கள் யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.