குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும். பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான 28ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
இது ஆங்கிலேயர் காலத்திய நடைமுறை என கூறி, தற்போதுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளை மாற்றியமைத்தது. எனவே, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது.

இன்று தொடக்கம்
இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை இன்று உரை நிகழ்த்துகிறார். இந்த ஆண்டு முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, அது மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்படுகிறது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம் பல்வேறு சலுகைகளை இந்த மாநிலங்களுக்கு அறிவிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

சலுகைகளுக்கு கெடுபிடி
இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதை, தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தள்ளிவைக்கவேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, பட்ஜெட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சலுகைகள் எதையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

மோதல் வாய்ப்பு
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் 5 மாநில வாக்காளர்களுக்கு தெரிவிக்கவேண்டிய தகவல்களை நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டு செல்ல முயற்சிக்கும் என்பதால் இரு தரப்பிலுமே மோதல் போக்கு காணப்படும் என்ற நிலை உள்ளது. நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி விதிப்பை வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளலாம்.

கடந்த கூட்டத்தில் அமளி
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகுந்த கூச்சல், குழப்பத்துடன் நடந்தது. அதே நிலை இப்போதும் நீடிக்க வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணி கட்சியான சிவசேனாவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அக்கட்சியிடம் இருந்தும் மத்திய அரசு நெருக்கடியை சந்திக்கலாம்.

பட்ஜெட் கூட்டத்திலும் பரபரப்பு
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஆகியவை பற்றியும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி மசோதா, வாடகைத்தாய் (கட்டுப்பாடு) சட்டம், சம்பளம் தொடர்பான சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications