நாடாளுமன்றத்தில் கிளப்பும் வியாபம், லலித்மோடி விவகாரம்... 3 வது நாளாக அமளி… ஒத்திவைப்பு
டெல்லி: வியாபம் ஊழல் பிரச்னை. லலித்மோடி விவகாரம், நாடாளுமன்றத்தில் இன்று 3வது நாளாக எதிரொலித்தது. கடும் அமளியுடன் கூச்சல், குழப்பம் நிலவியதால் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாளில் லோக்சபா இரங்கல் கூட்டத்துக்குப் பின் ஒத்திவைக்கப்பட்டது.

லலித் மோடி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2வது நாளாக நாடாளுமன்றம் கூடியது. லோக்சபா விபத்து, இயற்கை சீற்றம், தீவிரவாத தாக்குதல் போன்றவற்றில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் சில விஷயங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இவைகள் முக்கியமான விஷயங்கள் என்றாலும், அவையை ஒத்திவைத்து விவாதிக்ககூடிய விஷயங்கள் அல்ல என்றார்.
கேள்வி நேரத்தை சபாநாயகர் தொடங்கியதும், காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்கட்சிகள் முழக்கம்
லலித் மோடி விவகாரத்தில் தொடர்புடைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக கோரி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.
மோடிக்கு எதிரான வாசகங்கள்
‘பெரிய மோடி ஆதரவுடன், சின்ன மோடி வலுவாக உள்ளார் பிரதமரே உங்கள் மவுனத்தை கலையுங்கள் உங்களின் 56 இன்ஞ் மார்பை, சுஷ்மா மற்றும் வசுந்தராவை நீக்குவதில் காட்டுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர்.
கறுப்பு பேட்ஜ்
எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அப்போது அவையில் பிரதமர் மோடி இல்லை. அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
சபாநாயகர் எச்சரிக்கை
காங்கிரஸ் உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுக்காமல், அவையில் போராட்டம் நடத்துவதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்தார். இந்த அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
3வது நாளாக ஒத்திவைப்பு
மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இன்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். எதிர்க்ட்சிகளின் தொடர் அமளி காரணமாக லோக்சபா பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவை 12 மணிக்கு கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்படவே லோக்சபாவை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
ராஜ்யசபாவில் திலகருக்கு அஞ்சலி
ராஜ்யசபாவில் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பால கங்காதர திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சபாநாயகரின் எச்சரிக்கையை மீறி, எதிர்க்ட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications