பதன்கோட் விமானதளத்தை மீட்க தாமதம் ஏன்? பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் விளக்கம்
டெல்லி: பதன்கோட் தாக்குதலை வைத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக யாரும் மதிப்பிட வேண்டாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த பதன்கோட் விமானதளத்தை பார்வையிட்ட பிறகு நிருபர்களிடம் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: மொத்தம் 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை நாளையும் தொடரும். அதன்பிறகே, இது பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்க முடியும்.

ஒவ்வொரு தீவிரவாதியும், 40 முதல் 50 கிலோ அளவுக்கான வெடிபொருட்களுடன் ஊடுருவியிருந்தனர். இதனால்தான், ஆபரேசனை முடிக்க 4 நாட்கள் ஆனது. துல்லியமான தாக்குதல் நடத்திய தீவிரவாத கும்பலுக்கு எதிராக தீரத்தோடு போராடி அவர்களை வீழ்த்திய பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்கள்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள், போரில் உயிரிழந்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இதன்மூலம், போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் கூடுதல் உதவிகள், தற்போது வீர மரணம் அடைந்த குடும்பத்தாருக்கும் கிடைக்கும்.
பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்யவில்லை. எந்தெந்த பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு இருந்தது என்ற விவரத்தை எல்லை பாதுகாப்பு படையினரிடம் அரசு கேட்டுள்ளது. விமான தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பதை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும். இவ்வாறு மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications