குஜராத்தில் பரபர... பாஜகவில் சேர ரூ1 கோடி பேரம்... பட்டேல் சமூக தலைவர் நரேந்திர பட்டேல் பகீர் தகவல்
பாஜகவில் சேருவதற்கு தமக்கு ரூ1 கோடி பேரம் பேசப்பட்டதாக குஜராத் பட்டேல் சமூக தலைவர்களில் ஒருவரான நரேந்திர பட்டேல் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு தமக்கு ரூ1 கோடி பேரம் பேசப்பட்டதாக பட்டேல் சமூக தலைவர்களில் ஒருவரான நரேந்திர பட்டேல் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செல்வாக்கான நபர்களை வளைத்துப் போடுவதில் கட்சிகள் படுபிசியாக உள்ளன. பட்டேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக் கட்டு என முழங்கிய ஹர்திக் பட்டேல் தலைமையிலான இயக்கத்துக்கு இந்த தேர்தலில் ரொம்பவே மவுசு அதிகம்.

இத்தேர்தலில் காங்கிரஸுக்குதான் பட்டேல் சமூகத்தினர் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் பாஜகவினர் பட்டேல் போராட்ட குழு தலைவர்களை வழக்கம் போல பேரம் பேசி இழுப்பதில் தீவிரமாக உள்ளனர்.
ஹர்திக் பட்டேல் இயக்கத்தின் முக்கிய நபர்களாக இருந்த வருண் பட்டேல், ரேஷ்மா பட்டேல் உள்ளிட்டோர் அண்மையில் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் ஹர்திக் படேலுக்கு நெருக்கமான நரேந்திர படேல் அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பாஜகவில் சேருவதற்கு தமக்கு ரூ1 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் அட்வான்ஸாக ரூ10 லட்சம் தரப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். அத்துடன் தமக்கு கொடுக்கப்பட்ட பணத்தையும் செய்தியாளர்களிடம் நரேந்திர பட்டேல் காண்பித்தார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பாஜகவில் இணைந்த வருண் பட்டேல் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications