கான்பூர் ரயில் விபத்து... சோனியா இரங்கல்... விசாரணைக்கு வலியுறுத்தல்
கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த சோகத்தை ஒட்டுமொத்த நாடும் பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார்.
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பொக்ரியான் என்ற இடத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சோனியா காந்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.
பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி சின்னாபின்னமானது. ரயில்வே போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 100 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சோகத்தை நாட்டு மக்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வதாக கூறியுள்ள அவர், விபத்து குறித்து ரயில்வேத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க எம்பி முரளி மனோகர் ஜோஷி தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் விபத்து ஏற்பட்டதா அல்லது மத்திய அரசுக்கு எதிரான சதியா என ரயில்வேத்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தினேஷ் திரிவேதி இது ரயில் மட்டும் தடம்புரண்ட விபத்தல்ல ஒட்டுமொத்த ரயில்வேத்துறையும் தடம்புரண்டதால் ஏற்பட்ட விபத்து என குற்றம்சாட்டியுள்ளார்.
உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மத்தியப்பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரவித்துள்ளனர்.