பாட்னா குண்டுவெடிப்பு : பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் நிவாரணம்: நிதிஷ்குமார் அறிவிப்பு
பாட்னா: பாட்னா குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பாட்னாவில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலியானார்கள். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த தொடர்குண்டுவெடிப்புகளுக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

யோகா மாநாடு....
குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக நிதிஷ்குமார், பீகாரில் முங்கர் என்ற இடத்தில் சர்வதேச யோகா மாநாட்டில் பங்கேற்பதற்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். பாட்னாவில் எண்-1, அன்னி மார்க்கில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பு வாகனங்களும் புறப்படுவதற்கு தயாராகின. முங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நாலந்தா மாவட்டத்தில் ராஜ்கிர் என்ற இடத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் 2 நாள் கூட்டத்திலும் நிதிஷ் குமார் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

பயணம் ரத்து...
இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்புகள் பற்றிய தகவலறிந்த முதல்வர் உடனடியாக தனது வெளியூர் பயணத்தை ரத்து செய்தார். அதைத் தொடர்ந்து அவர் உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றை கூட்டினார். இதில் மாநில அரசு தலைமைச்செயலாளர் ஏ.கே. சின்கா, போலீஸ் டி.ஜி.பி. அபயானந்த், உள்துறை முதன்மை செயலாளர் அமீர் சுபானி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

புலன் விசாரணை...
ஆலோசனைக் கூட்டத்தில், தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து உடனடியாக புலன்விசாரணையை தொடங்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவிட்டார். இதில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ.யின் உதவி பெறப்படும் என அவர் தெரிவித்தார்.

நிவாரண உதவி...
அதன் பின்னர், தொடர் குண்டுவெடிப்புகளில் பலியான 5 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் நிதிஷ் குமார் அறிவித்தார்.

பாதுகாப்பு பலம்....
மேலும், மோடியின் பொதுக்கூட்டத்தை முன்னிறுத்தியே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும், ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதும் குறைபாடு இல்லை. இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை முன்னெச்சரிக்கை எதுவும் வரவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள்...
இது பீகார் மாநில அரசுக்கு ஏற்பட்ட சோதனை அல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கே விடப்பட்ட அச்சுறுத்தல். குண்டு வெடிப்பின் பிண்ணனியில் உள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நிதீஷ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications