பவன் கல்யாணின் பா.ஜ.க கூட்டணி வியூகம் - டெல்லியில் முகாம்
டெல்லி: பா.ஜ.வுடன் கூட்டணி அமைக்க பவன் கல்யாண் டெல்லியில் முகாம் இட்டுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நடிகர் பவன் கல்யாண் "ஜன சேனா" என்ற புதுக்கட்சியை ஐதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கினார்.
அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக உள்ளதால், ஆந்திர அரசியலில் புது சக்தியாக அவரது ஜன சேனா கட்சி உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் வேணவே வேணாம்:
காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இளம் வாக்காளர்களை ஈர்க்கும் சக்தி பவன் கல்யாணுக்கு உள்ளதால், அவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இறங்கின.

டெல்லியில் முகாம்:
இந்நிலையில் பவன் கல்யாண் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்தப் பேச்சவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், பவன் கல்யாண் அகமதாபாத் சென்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திப்பார் என தெரிகிறது.

அண்ணன் முதல்வர் வேட்பாளர்:
சீமாந்திரா பகுதியில் தேர்தல் பிரசார பொறுப்பை சிரஞ்சீவியிடம் காங்கிரஸ் வழங்கியுள்ளது. அவரே முதல்வர் வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பவன் கல்யாண் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்தால், அவர் தனது சகோதரர் சிரஞ்சீவியுடன் தேர்தல் களத்தில் நேரடியாக போதும் நிலை ஏற்படும்.

புதிய உதயம்:
கடந்த 2009 ஆம் ஆண்டில், சிரஞ்சீவிக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.ஆந்திராவில் புதிதாக உதயமாகி உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, தெலுங்கு தேசம் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரகசிய சந்திப்பு:
இதனால், பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை ரகசியமாக அவர் சந்தித்து பேசியுள்ளார். மேலும், தற்போது பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாகபட்டினம்:
வரும் 27 அல்லது 28 ஆம் தேதி சீமாந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தி யாருடன் கூட்டணி என்று அறிவிப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நரேந்திர மோடி மற்றும் பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து பவன் கல்யாண் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுக்கூட்டம் விரைவில்:
ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் குறிப்பிட்ட சிலரை மட்டும் வரவழைத்து ஜனசேனா கட்சி தொடங்கப்பட்டது. 2 ஆவதாக பெரிய அளவில் லட்சக்கணக்கான இளைஞர்களுடன் ஜனசேனா கட்சி சார்பில் 25 முதல் 27 ஆம் தேதிக்குள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கூட்டணி அறிவிப்பு:
தெலுங்கு தேசம், பாஜ, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளும் மாநிலம் பிரிக்கப்பட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதனால், இன்னும் 2 அல்லது 3 தினங்களில் தெலுங்கு தேசம் அல்லது பாஜ கூட்டணி குறித்து தெரிவிப்பார் என்றும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications