நரேந்திர மோடியை சந்திக்கவில்லை: சரத்பவார் மறுப்பு
மும்பை: பாரதீயஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடந்த ஒரு ஆண்டில் ஒருபோதும் சந்தித்த்தில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார், நரேந்திர மோடியை டெல்லியில் கடந்த 17ந் தேதி ரகசியமாக சந்தித்து பேசியதாக, மராத்தி செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சரத்பவார், நரேந்திர மோடியை சந்தித்து பேசியதாக வெளியான இந்த செய்தியால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சரத்பவார், ‘டுவிட்டர்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மாநில சுற்றுப்பயணம் மற்றும் டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் வைத்து நரேந்திர மோடியை சந்தித்ததை தவிர, கடந்த ஒரு ஆண்டில் அவரை தனியாக ஒருபோதும் சந்தித்ததில்லை' என்று கூறியுள்ளார்.