பணி நீக்கம் செய்த ஊழியருக்கு ரூ.12.5 லட்சம் இழப்பீடு: ஐடி நிறுவனத்துக்கு கர்நாடக லேபர் துறை உத்தரவு
பெங்களூரு: வேலையை விட்டு நீக்கிய ஐடி நிறுவனம், பணியாளுக்கு ரூ.12.5 லட்சம் அளிக்க வேண்டும் என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை உத்தரவுபோட்டுள்ளது.
பெங்களூரு சி.வி.ராமன் நகரிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 27 வயதான இந்த டெல்லி பெண், பெங்களூருவிலுள்ள அந்த அமெரிக்க ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சிறந்த பணியாளர்
கடந்த ஆண்டு மே மாதம், அளிக்கப்பட்ட ஊதிய உயர்வின்போது பிற ஊழியர்களுக்கு ஐந்து சதவீதமும், மாலாவுக்கு 8 சதவீத உதிய உயர்வும் அளித்தது அந்த நிறுவனம். மேலும், போனசாக 56 ஆயிரத்து 694 ரூபாய்களும் அளிக்கப்பட்டது. சிறப்பாக வேலை பார்ப்பதாக அமெரிக்க முதலாளியிடமிருந்து இ-மெயிலில் பாராட்டு கடிதமும் பெற்றார் மாலா. ஆனால் அடுத்த மாதமே, நிலைமை தலைகீழானது.

திடீர் நெருக்கடி
அமெரிக்காவிலுள்ள மேலாளர், மாலாவுக்கு நெருக்கடி தர ஆரம்பித்தாராம். திறமை மேம்பாட்டு திட்டத்தில் இணைந்து பணித்திறமையை அதிகரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக ஒரு பணியை செய்து முடிக்க முடியாவிட்டால்தான் இதுபோன்ற பயிற்சி ஐடி நிறுவனத்தில் அளிக்கப்படும். ஆனால் சிறந்த ஊழியரான தனக்கு இப்படி ஒரு சோதனை செய்ய வேண்டிய அவசியம் தேவையில்லை என்று கூறி மாலா அனைத்து உயர் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் யாரும் செவிமடுக்கவில்லை.

காரணமின்றி டிஸ்மிஸ்
இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 29ம்தேதி, மாலாவை வேலையில் இருந்து நீக்குவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துவிட்டதாம். அவரது பொருட்களை கூட எடுக்கவிடாமல் பாதுகாவலரால் வெளியே பிடித்தும் தள்ளப்பட்டுள்ளார் மாலா. கோபமடைந்த அவர் எச்.ஏ.எல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாதுகாப்புடன் வந்து தனது பொருட்களை அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட, மன உளைச்சலால் சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை மாலாவுக்கு.

ரூ.12.5 லட்சம் நிவாரணம்
அதன்பிறகு, பெண்கள் கமிஷனை அணுகி தனது நிலையை கூறியுள்ளார். அவர்கள் தொழிலாளர் நலத்துறைக்கு இந்த பிரச்சினையை சிபாரிசு செய்துள்ளனர். தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தை நடத்தி குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து ரூ.12.5 லட்சத்தை நிவாரணமாக பெற்றுக் கொடுத்துள்ளது. உரிய காரணம் இன்றி வேலையைவிட்டு நீக்கியது தவறு என்று தொழிலாளர் நலத்துறை கூறிவிட்டது.

போதாது என்கிறார் ஊழியர்
இதையடுத்து நிவாரணத்துக்கான காசோலையை தொழிலாளர் நலத்துறையிடம் அமெரிக்க நிறுவனம் அளித்துள்ளதாம். ஆனால் வக்கீல் கட்டணம், மருத்துவ செலவு, அனுபவ சான்று தராததால் தன்னால் ஓராண்டாக வேலை பார்க்க முடியாமல் இருப்பது போன்றவற்றை ஒப்பிடும்போது இந்த நிவாரணம் மிக குறைவு என கூறி இன்னும் மாலா காசோலையை வாங்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications