லேட்டாக வந்தால் வெளியே நிற்க வேண்டும்.. பாஜக எம்.பிக்களுக்கு மோடி கிடுக்கிப்பிடி!
டெல்லி: பாஜக கூட்டத்திற்கு தாமதமாக வரும் எம்.பிக்களை வெளியே நிற்க வைக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 9.30 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதன்படி இக்கூட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட்டம் நடந்தபோது கூட்டத்திற்கு 10 நிமிடம் முன்பே வந்து விட்டார் மோடி. ஆனால் மற்றவர்கள்தான் ஹாயாக வந்து சேர்ந்தனர். அதிலும் 20 பேர் தாமதமாக வந்தனர்.
இதைப் பார்த்த மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் ஏதோ சொன்னார். இதையடுத்து கூட்டம் முடிவடையும்போது நாயுடு எழுந்து இனிமேல் கூட்டம் சரியாக 9.30 மணிக்குத் தொடங்கி விடும். 9.35 மணிக்கு கூட்ட அரங்கின் வாசல் கதவு மூடப்பட்டு விடும். அதன் பின்னர் வருவோர் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் செவ்வாய்க்கிழமையன்று பாஜக எம்.பிக்களின் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அப்படியும் 20 பேர் லேட்டாக வந்ததால் இந்த உத்தரவை மோடி பிறப்பித்துள்ளார்.
இனிமேல் யாராவது லேட்டாக வந்தால் வெளியில் நிற்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் வர முடியவில்லை. இந்தக் கூட்டங்களில் மாதம் ஒருமுறை பாஜக தலைவர் அமீத் ஷா கலந்து கொள்கிரார்.
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று மோடி ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல விதிகளையும் அவர் தனது கட்சியினருக்கு விதித்துள்ளார் கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் எம்.பிக்கள் வர வேண்டும் என்பது அதில் ஒன்றாகும்.
மேலும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் போது பாஜக எம்.பிக்கள் யாரும் வெளிநாட்டுக்குப் போக முடியாது என்பதும் இன்னொரு கட்டுப்பாடாகும்.