"என்னை கொல்ல முயற்சி.." ஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண்.. ஆளும் தரப்பு மீது பகீர் குற்றச்சாட்டு
அமராவதி: ஆந்திரா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தன்னை சிலர் கத்தி மூலம் தாக்க முயல்வதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் லோக்சபா தேர்தல் உடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆந்திரா: நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தல் + சட்டசபைத் தேர்தல் என இரண்டிற்கும் ஒருசேரப் பிரச்சாரம் தொடங்கி உள்ளது. இரண்டு தேர்தலும் அங்கே ஒரே கட்டமாக மே 13இல் நடக்கிறது. ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கே 175 சட்டசபை தொகுதிகளும் 25 லோக்சபா தொகுதிகளும் இருக்கிறது. இப்படி இரண்டிற்கும் தேர்தல் நடப்பதால் அங்கே அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரை செய்து வருகிறது.
இதற்கிடையே ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். மேலும், சமீபத்தில் தான் கலந்து கொண்ட கூட்டத்தில் சிலர் மெல்லிய கத்திகளால் தன்னை தாக்கவும் முயன்றதாக அவர் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
பவன் கல்யாண்: கட்சித் தொண்டர்கள் உடனான கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், பெரிய பொதுக்கூட்டங்கள் நடக்கும் போது தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் மீது தாக்குதல் நடத்தச் சிலர் முயல்வதாகவும் கூறி பகீர் கிளப்பி இருந்தார். அவர் மேலும் கூறுகையில், "என்னைச் சந்திக்க மக்கள் அதிக அளவில் வரும்போதெல்லாம், ஒரு சிலர் பிளேடுகளுடன் கூட்டத்திற்குள் ஊடுருவிவிடுவார்கள். என்னைத் தாக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு.
அவர்களைக் கண்டறிந்து பிடிப்பதே எனது பாதுகாப்பு டீமிற்கு முக்கிய வேலையாக இருக்கிறது. எதிர்த் தரப்பில் உள்ளவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
கொலை முயற்சி: ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 கட்சி உறுப்பினர்களை அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வேன். அப்போது உரியப் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும். அதேநேரம் பெரிய கூட்டங்களின் போது, என்னைத் தாக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் அடியாள்களை அமர்த்துகிறார்கள். அவர்கள் பிளேடை கையில் எடுத்து வந்து என்னை தாக்க முயல்கிறார்கள். என்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சதி செய்கிறார்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட இதுபோன்ற நிகழ்வு அரங்கேறியது" என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திரா கள நிலவரம்: ஆந்திர பிரதேசத்தில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதேநேரம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தெலுங்கு தேசம் 17 இடங்களில் போட்டியிடும் நிலையில், பாஜக 6 சீட்களிலும், ஜனசேனா 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. அங்கே முக்கியமாக இந்த இரு அணிகளுக்கு இடையே தான் போட்டி. இது தவிர இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications