இப்பவே கண்ண கட்டுதே.. மோடி அறிவிப்பால் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி
டெல்லி: இன்று இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளதால் மக்கள் ஷாக் ஆகியுள்ளனர். இருக்கும் குழப்பத்தில் இந்த குழப்பம் வேறா, என தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.
இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியிலிருந்தபடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக திடீரென உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது ஷாக் கொடுக்கும் விதமாக, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற புதிய அறிப்பை வெளியிட்டார்.
ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், எனவே இன்று அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்படி மாற்றும்போது, அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே இனிமேல் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கலாம். ஆதார் அட்டையை கட்டாயம் பெற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் விழி பிதுங்கிய மக்கள், கொஞ்சம், கொஞ்சமாக இப்போதுதான் தேறி வருகிறார்கள். இன்னமும் முழுமையாக ஆதார் அட்டை மக்களை சென்றடையவில்லை. இந்த நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் சாராம்சம் கடைக்கோடி கிராம மக்களுக்கு தெரிவதற்குள் என்னென்ன களேபரம் நடைபெறுமோ தெரியவில்லை. அதேநேரம் சோஷியல் மீடியாவில் மோடி நடவடிக்கையை பாராட்டி கருத்துக்கள் வெளியாவதையும் பார்க்க முடிகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்க மக்கள் இரு நாள் அவதிப்பட்டால் தப்பில்லை என்ற ரீதியில் கருத்துக்கள் வெளியே வருகின்றன.