புயல் பாதிப்பை தொடர்ந்து.. அச்சுறுத்திய நிலநடுக்கம்! மணிப்பூரில் பதற்றம்.. மக்கள் தவிப்பு
இம்பால்: சமீபத்தில் கரையை கடந்த ரெமல் புயல் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த ரெமல் புயல் சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையே கரையை கடந்தது. இது கரையை கடக்கும்போது கடும் மழை மற்றும் சூறை காற்றை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன.

தொடர் கனமழை காரணமாக திடீரென பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளத்தாலும் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டன. சாலைகள் மண் சரிவால் மூடப்பட்டதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மழை வெள்ளம் காரணமாக தற்போது வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.
புயல் ஓய்ந்து 4 நாட்கள் ஆன பின்னரும் கூட, இன்னமும் மழையின் தாக்கம் குறையவில்லை. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆக உயிரிழந்துள்ளது. மணிப்பூரில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்படி இருக்கையில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளது. சந்தல் பகுதியில் நிலத்திற்கு அடியில் 77 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே மழை, வெள்ளம் காரணமாக மணிப்பூர் தத்தளித்து வரும் நிலையில், தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவு 5க்கு மேல் சென்றால்தான் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் தற்போது அச்சமடைய வேண்டாம் என அதிகாரிகள் மணிப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications