ஒத்துழைப்பு தராவிட்டால் பாஜகவுக்கு இதை விட பெரிய பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.. கெஜ்ரிவால்
டெல்லி: புதிய டெல்லி அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு நல்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி அவர்கள் தராவிட்டால் மக்கள் அவர்களுக்கு இதை விட பெரிய பாடத்தைக் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும், போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான். தேவைப்பட்டால் அதையும் நான் செய்யத் தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மியின் 5 ஆண்டு பதவிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கெஜ்ரிவால் பேட்டி கொடுத்துள்ளார். அதிலிருந்து சில...

பதவியேற்பு விழாவுக்கு வருக
பிரமரை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பேன். பிரதமரை பொறுத்தவரை முதல்வர்கள் பதவியேற்பு விழாவுக்கு செல்வதில்லை. ஆனாலும் அவரை அழைப்பேன். கிரண் பேடியையும் அழைப்பேன். இருவரும் வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நேரடிப் போட்டி
இந்த தேர்தலில் எங்களுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் மட்டுமே நேரடி போட்டி இருந்தது. பாரதீய ஜனதா தனது மோசமான தந்திர வேலைகளை செய்தது. அதை சவாலாக எதிர்கொண்டோம். பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாளும் இறங்கினார்கள். அதையும் எதிர் கொண்டோம்.

விட்ட பணிகளைத் தொடருவோம்
முதல் ஆட்சிக்கும், இப்போதைய ஆட்சிக்கும் வித்தியாசம் எதுவும் இருக்கும் என நான் கருதவில்லை. நாங்கள் கடந்த 49 நாள் ஆட்சியில் பல பணிகளை முடிக்காமல் விட்டு சென்றோம். அதை தொடருவோம். சரியான பணிகளை செய்து முடிப்போம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
தேர்தலுக்கு முன்பு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 5 ஆண்டு காலத்தில் எங்கள் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். லஞ்சத்தை ஒழிப்போம். இதற்காக லஞ்ச ஒழிப்பு உதவி அமைப்பு மீண்டும் தொடங்கப்படும். இலவச குடிநீர், மின் கட்டண குறைப்பில் கவனம் செலுத்துவோம். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்.

போராட்டமும் ஜனநாயகம்தான்
ஜனநாயகம் என்பதே 4 விஷயத்தில்தான் உள்ளது. விவாதம், ஏற்க மறுப்பு, கலந்தாலோசித்தல், தர்ணா ஆகிய 4 விஷயங்கள் இருந்தால்தான் அது ஜனநாயகம். இந்த நான்கும் முக்கியமானது. இதில் எது தேவைப்பட்டாலும் அதை நான் எடுத்துக்கொள்வேன். தேவைப்பட்டால் கடைசி ஆயுதமாக தர்ணாவை எடுத்துக் கொள்வேன். இது வெளிப்படையானது. கடந்த ஒரு ஆண்டில் ஒரேவொரு தர்ணா போராட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வேறுவழியில்லை என்றால் அதையும் செய்வோம். நமது போராட்டத்தின் மூலம் சம்மந்தப்பட்ட தரப்பை மூச்சுதிணற வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் ஜனநாயகம் ஆகும்.

ஒத்துழைக்காவிட்டால் அவர்களுக்குத்தான் கஷ்டம்
எங்களது ஆட்சிக்கு பாரதீய ஜனதா முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை அவர்கள் தருவார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவர்களுக்கு வாக்காளர்கள் இன்னும் பாடம் புகட்டுவார்கள். நாங்கள் எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டவற்றைதான் கேட்போம். எல்லாவற்றுக்கும் தேர்தல் என்று ஒன்று உள்ளது. அடுத்த தேர்தலில் அவர்களும் போட்டியிட வேண்டும். எங்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் அவர்களுக்கும் நல்லபெயர் கிடைக்கும்.

எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்
மக்கள் தங்கள் ஆதரவை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி மட்டுமே உண்மையான, நேர்மையான கட்சி என்பதை உணர்ந்து மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். எல்லா மக்களும் நேர்மையான கட்சி, நேர்மையான அமைப்பு என்ற முறையில் ஆதரவு தந்துள்ளனர்.

மோடிக்கு எதிரான ஓட்டு அல்ல
நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக மட்டும் பிரசாரம் செய்திருந்தால் அரசுக்கு எதிரான வாக்கு என்று சொல்லலாம். ஆனால் டெல்லியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பது பற்றிய தேர்தல் இது. அப்படி இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஓட்டு என்று நாங்கள் எப்படி சொல்ல முடியும். ஆனால் பாரதீய ஜனதாவுக்கு எதிரான ஓட்டு என்பதை உறுதியாக சொல்வோம். மத்தியில் ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் அவர்கள் எதையும் உருப்படியாக செய்யவில்லை. அவர்கள் வாய் ஜாலம் மட்டுமே காட்டினார்கள். மக்கள் இந்த மாதிரியான அரசியலை புறக்கணித்துள்ளனர். இதை கெஜ்ரிவால்-மோடிக்கு இடையே நடந்த தேர்தலாக கருதக்கூடாது.

இலவச குடிநீரில் ஆதாயம் பார்க்கக் கூடாது
இலவச குடிநீர் என்பது சிறந்த முதலீடு ஆகும். இதிலெல்லாம் ஆதாயத்தை பார்க்க கூடாது. மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான இலவச தண்ணீரை கொடுத்தால் அதன் காரணமாக பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்படும். அவர்களுக்கு இலவச நீர் கொடுப்பதன் மூலம் ரூ. 160 கோடி கூடுதலாக செலவாகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த பணத்தை மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடுவதில் தவறில்லை. இந்த விஷயத்தில் நான் ஒரு வியாபாரி. ஒரு தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும். நிச்சயமாக அரசுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் நான் அரசை நடத்த மாட்டேன்.

அனுபவம் தேவையில்லை
பிரதமர் நரேந்திரமோடி அனுபவம் இல்லாத எம்.பி.க்களை பயிற்சி கொடுத்துதான் ஆட்சி நடத்துகிறார். அதேபோல நாங்களும் செய்வோம். யாருமே அனுபவத்தோடு பிறப்பதில்லை. அனுபவம் இல்லை என்பதற்காக நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடாது. காங்கிரஸ் கட்சி மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டது. அதனிடம் ஆட்சியை ஒப்படைத்தோம். அவர்கள் சிறப்பாக செய்தார்களா? இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானமல்ல. நிர்வாகம் செய்வதற்கு அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதுபோதுமானது என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications