பெங்களூர் டிராபிக்கும் சந்திரமுகிகளும்!!
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை இதைவிட அழகாக புகைப்படம் மூலம் விளக்க முடியாது.
ஐ.டி. நகரமான பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. பெங்களூரில் பல சாலைகள் மிகவும் குறுகியவை. ஆனால் நகரில் ஓடும் வாகனங்களுக்கு மட்டும் குறைவே இல்லை. இதனால் எப்பொழுது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் தான்.
அதுவும் சில்க் போர்டு சிக்னல், பிடிஎம், மாரதஹள்ளி, குந்தலஹள்ளி கேட், கே.ஆர்.புரம் ஆகிய பகுதிகளில் எந்நேரம் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். அதுவும் காலையிலும், மாலை அலுவலகங்கள் முடியும் வேளையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிக்னல்களை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சில இடங்களில் எல்லாம் ஒரு சிக்னலை கடக்க குறைந்தது 20 நிமிடம் கூட ஆகலாம். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் ஒரு புகைப்படம் தீயாக பரவியுள்ளது. அதாவது பிடிஎம் லேஅவுட்டில் இருந்து அழகாக கிளம்பும் ஒரு பெண் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஐடிபிஎல்லை அடையும்போது சந்திரமுகி போன்று பயங்கரமாக ஆகிவிடும் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கிறார்கள்.
அந்த புகைப்படம் லைட்டா ஓவர் என்றாலும் உண்மை தான் என்பது பெங்களூர்வாசிகளுக்கு தெரியும்.