மோடி பெயர் பொறித்த சூட்டுக்கு ரேட் வேகமாக கூடுகிறது.. ரூ. 1 கோடியைத் தாண்டியது ஏலம்!
அகமதாபாத்: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த அவரது பெயர் பொறிக்கப்பட்ட கோட்டை ஏலம் விடும் பணி தொடங்கியுள்ளது. காலையில் தொடங்கிய ஏலம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிற்பகல் நிலவரப்படி அதன் தொகை ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த கோட் மட்டுமல்லாமல் மோடிக்கு அன்பளிப்பாக வந்த 450 பிற பொருட்களும், பரிசுகளும் ஏலம் விடப்படுகின்றன. இதில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு அளிக்கவுள்ளனராம். சூரத்தில் இன்று இந்த ஏலம் தொடங்கியது.

கடந்த மாதம் ஒபாமா டெல்லி வந்திருந்தபோது வித்தியாசமான கோட் போட்டிருந்தார் மோடி. அந்த கோட்டில் அவரது பெயரை கோடு போல அடித்திருந்தனர். இந்த கோட் மிகவும் காஸ்ட்லியானது என்று சர்ச்சை வெடித்தது. ராகுல் காந்தி கூட இதை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் வழக்கம் போல மோடி இதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார்.
இந்த சர்ச்சை கோட்தான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது மோடி போட்டிருந்த கோட், அகமதாபாத்தில் உள்ள ஜேட் ப்ளூ நிறுவனம் தயாரித்துக் கொடுத்ததாகும். இவர்கள்தான் மோடியின் டிரஸ்ஸைத் தைத்துக் கொடுத்து வருகிறார்கள். மேலும் மோடி குர்தாவுக்கும் இவர்கள் காப்பிரைட் வாங்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை ஏலம் தொடங்கியதுமே ராஜுபாய் அகர்வால் என்ற பாஜக தலைவர் ரூ. 51 லட்சத்திற்கு கோட்டை ஏலம் கேட்டார். அடுத்த சில நிமிடங்களில் சுரேஷ் அகர்வால் என்ற ஜவுளி அதிபர் ரூ. 1 கோடியாக ரேட்டை உயர்த்திக் கேட்டார். தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை ஏலம் கேட்கலாம். அதன் பின்னர் கடைசியாக அதிக தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு கோட் சொந்தமாகும்.
மோடிக்கும், ஏலத்திற்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. முன்பு அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது கூட 18,000 முறை தனக்கு வந்த பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த தொகையை பல்வேறு அறப் பணிகளுக்கு செலவிட்டார் என்பது நினைவிருக்கலாம். மேலும் பெண்கள் கல்விக்காக அவர் ரூ. 30 லட்சம் நிதியையும் ஏலம் மூலம் திரட்டிக் கொடுத்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications