ஷீனா கொலை பற்றி பீட்டர் முகர்ஜிக்கு ஏற்கனவே தெரியும்: சிபிஐ
மும்பை: ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜிக்கு இந்திராணி ஷீனா போராவை கொலை செய்தது தெரியும் என்று சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்து அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வழக்கில் போலீசார் இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை பீட்டரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஷீனா கொலை குறித்து பீட்டரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து சிக்கினார்.
பீட்டர் இன்று மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
ஷீனா கொலை பற்றி பீட்டருக்கு ஏற்கனவே தெரியும். ஷீனா கொலை செய்யப்பட்டபோதும், அவரது உடல் எரிக்கப்பட்டபோதும் பீட்டர் இந்திராணியுடன் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். ஷீனா குறித்து கேட்ட தனது மகன் ராகுலிடம் அவர் பொய் சொல்லியுள்ளார். ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், அவருடன் போனில் பேசியதாகவும் பீட்டர் ராகுலிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பீட்டர் போனில் தெரிவித்தபோது ராகுல் அதை பதிவு செய்துள்ளார்.

பின்னர் ராகுல் அந்த செல்போன் பேச்சு பதிவை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்தார். அவரை எங்கள் காவலில் வைத்து 14 நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
பீட்டரின் வழக்கறிஞரோ அவர் கொலை நடந்தபோது லண்டனில் இருந்ததாகவும், இது குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பீட்டரை வரும் 23ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார். ஷீனா கொலை வழக்கில் இந்திராணி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட கொலை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பீட்டர் மீதும் தற்போது சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திராணி, கன்னா, ராய் ஆகியோரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களின் நீதிமன்ற காவல் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications