ஷீனா போரா வழக்கு... இந்திராணியை விவாகரத்து செய்ய பீட்டர் முடிவு... வக்கீலுடன் ஆலோசனை
மும்பை: சர்ச்சைக்குரிய மனைவி இந்திராணி முகர்ஜியை விவாகரத்து செய்வது குறித்து பீட்டர் முகர்ஜி யோசித்து வருகிறாராம். இதுதொடர்பாக தனது வக்கீலுடன் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போரா என்ற இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். இது 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷீனாவின் தாய் இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலையில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பீட்டர் முகர்ஜி ஸ்டார் இந்தியா முன்னாள் தலைமை நிர்வாகி ஆவார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து பீட்டருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் இந்திராணி. அதில் தான் அப்பாவி என்று அவர் கூறி வருகிறார். ஆனால் அவரது கடிதங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே பதில் அனுப்பியிருந்தார் பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 40க்கும் மேற்பட்ட கடிதங்களை இந்திராணி அனுப்பியுள்ளாராம்.
அவர் இந்திராணிக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில் தனது உடல் நிலை குறித்து உருக்கமாக கூறியுள்ளார். அதில் எனது இதயம் சரியில்லை. கடந்த சிலமாதங்களாக தனிமையில் வாடி வருகிறது. எனது உடல் நிலையும் சரியில்லை. ஒரு நாள் கோமாவில் விழுவேன். எனது உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழந்து போகும். அது எனது விதி என்று கூறியுள்ளார் பீட்டர்.
இந்த சூழ்நிலையில்தான் பீட்டர், இந்திராணியை விவாகரத்து செய்ய யோசித்து வருவதாக, அவரது வக்கீல் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பீட்டரின் வக்கீலான மிஹிர் கீவாலா கூறுகையில், "இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தனது திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாகவும், விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும் அவரது ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதால் விவாகரத்துக்கான நடைமுறைகளை அவர் நிறுத்தி வைத்துள்ளார்" என்றார்.
இதற்கிடையே, பீட்டர் முகர்ஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications