பூலான் தேவி கொலை வழக்கு: ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை - டெல்லி கோர்ட் தீர்ப்பு!
டெல்லி: பூலான் தேவி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள்து.
மத்திய பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து பண்டிட் குயின் என பிரபலமாக அறியப்பட்ட பூலான் தேவி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானவர். கடந்த 2001ஆம் ஆண்டு டெல்லியில் அவரது வீட்டின் முன்பு, காரில் வந்த முகமூடி அணிந்த மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் கடந்த 8-ந் தேதியன்று ஷேர்சிங் ராணா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற வாதத்தின் போது ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். ஆனால் தமக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் ராணா மன்றாடிக் கேட்டார். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில் ஷேர்சிங் ராணாவுக்கான தண்டனை விவரத்தை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்தது. ராணாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 1 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.