பூலான் தேவி கொலை வழக்கு: ஷேர் சிங் ரானா குற்றவாளி; 11 பேர் விடுதலை

கொள்ளைக்காரியாக இருந்து பண்டிட் குயின் என பிரபலமாக அறியப்பட்ட பூலான் தேவி, சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
அவருக்கு டெல்லியில் லோக்சபாவிற்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44-ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம்.
2001-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. எனவே, பூலான்தேவி டெல்லி வந்து நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
25-7-2001 அன்று நாடாளுமன்றக் கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1-30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டு முன் கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார்.
கேட்'டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முன்னால் சென்றார். அப்போது, திடீரென்று முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி திருப்பி சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது.
பழிக்கு பழி வாங்கும் விதமாக நடந்த இந்த கொலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷேர் சிங் ரானாவை குற்றவாளி என்றும், மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications