உயிருள்ள புறாவை கட்டி ராக்கெட் பட்டாசு விட்ட காங்கிரசார்… அதிர்ச்சி வீடியோ
மேற்கு கோதாவரி: ராக்கெட் பட்டாசுடன் உயிருள்ள புறாவை கட்டி வானத்தில் ஏவி, காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு வரவேற்பளித்த கொடூரம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. இதில் பட்டாசுடன் பறக்க விடப்பட்ட புறா தரையில் செத்து விழுந்தது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கொவ்வாரு என்ற நகரத்துக்கு வந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீர் ரெட்டியை அவரை வரவேற்கும் விதமாக உயிருடன் உள்ள புறாவை ராக்கெட் பட்டாசுடன் கட்டி வானத்தில் செலுத்தியுள்ளனர்.
பல அடி உயரம் பறந்து சென்ற அந்த ராக்கெட், வெடித்துச் சிதறிய போது, அதற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த புறா, உயிரிழந்த நிலையில் தரையில் விழுந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அன்பு, சமாதானத்தின் அடையாளமாக புறாக்களும் கருதப்படுகின்றன. முன்னாள் பிரதமர் நேரு 'சமாதானப்புறா ' என்று உலக மக்களால் கருதப்பட்டவர் . புறாவை சாதுவான பறவை. அப்படிப்பட்ட அப்பாவி உயிரை காங்கிரஸ் கட்சியினரே இவ்வாறு கொடூரமாக கொன்றது, பறவை ஆர்வலர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
மனிதாபிமானம் அற்ற இந்த செயலை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான ரகுவீர் ரெட்டி எப்படி அனுமதித்தார் என்றும் பறவை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து மேற்கு கோதாவரி காவல் நிலையத்தில் பறவை ஆர்வலர்கள் புகார் அளித்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரகுவீர் ரெட்டி, '' எனக்கு அந்த ராக்கெட் பட்டாசுடன் புறாக்கள் கட்டி அனுப்பப்பட்டது தெரியாது. சாதாரணமாக பட்டாசு வெடிக்கிறார்கள் என்றே நினைத்தேன். தெரிந்திருந்தால் அதனை தடுத்திருப்பேன் என்று அசால்டாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications