சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்பது தென்மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை மனுக்களும் அனுப்பப் பட்டன. அவற்றை ஆராய்ந்த சட்டத்துறை, ‘சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க' பரிந்துரை செய்தது. இதற்கு நாடாளுமன்றக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஏ.எம்.கிருஷ்ணா என்பவர், 'சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழங்கிய முக்கியமான மனித உரிமைகளில் ஒன்று. அரசியல் அமைப்பு சட்டத்தின் 19 - ஏ பிரிவில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன; நீதிபதிகளுக்கு வேலைப்பளு அதிகரித்து உள்ளது.
நம்மை போன்ற ஜனநாயக நாடுகளில் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் முடங்கியுள்ளது என்பதற்காக நீதி கோருபவர்களுக்கு நீதியை மறுக்க முடியாது. மாறாக நீதித்துறை விரிவடைய வேண்டும். அதாவது நீதி வழங்கும் நீதிமன்றங்கள் பல விதங்களில் பெரிதாக வேண்டும்.வழக்குகள் அதிகரிக்கும் அளவுக்கு நீதிமன்றங்களும் பெருக வேண்டும்.
உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்து உள்ளதால் தமிழகம், கேரளா, அசாம் போன்ற தூர மாநிலங்களில் உள்ளவர்களால் அதனை எளிதாக அணுக முடியவில்லை. போக்குவரத்து செலவும் அதிகம்; தங்கும் வசதியை பார்க்க வேண்டும்; மொழி பிரச்னை போன்ற பல விஷயங்களை கவனிக்க வேண்டி உள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் தமிழகத்திலும் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் உச்சநீதிமன்றக் கிளைகளை அமைக்க வேண்டும். நிதி நிலைமை உச்சநீதிமன்ற கோர்ட்டின் கட்டமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் கிளைகள் துவக்கப்பட வேண்டியது அவசியம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இவரது மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனால், சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைந்தால், அது தென் மாநிலங்கள் அனைத்திற்கும் அதிக உபயோகமானதாய் இருக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.












Click it and Unblock the Notifications