பட்ஜெட்டுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் கூடியது!
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டப்படும் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது.
டெல்லி : லோக்சபாவில் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட் குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
2018- 19ம் நிதியாண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டானது 11 மணியளவில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் உரையை நிகழ்த்த உள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். பட்ஜெட் குறித்த அம்சங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களுக்குக் கூட தெரியாது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டப்படும் அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த வழக்கமான நடைமுறைக்காக பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர்கள் அனைவரும் லோக்சபா வந்தவுடன் 11 மணி முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜேட்லி வாசிக்கத் தொடங்குவார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப் போகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் அனைத்து தொழில்துறையினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.