முதல்வர்களுடன் 7-ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை: ஓ.பி.எஸ். "முதல் முறையாக" டெல்லி பயணம்?
டெல்லி: திட்டக் குழுவை மாற்றி புதிய அமைப்பு ஏற்படுத்துவது பற்றி மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் டிசம்பர் மாதம் 7-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைந்த அரசு நிலையில் திட்டக் குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இந்த புதிய அமைப்பை உருவாக்க மாநில முதல்வர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்றும் மோடி அடிக்கடி கூறி வருகிறார். இது தொடர்பாக 7-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
மாநில முதல்வர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஏற்று திருத்தங்கள் செய்யவும் மோடி திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இக்கூட்டத்தில் பங்கேற்றால் 'முதல்வராக' அவர் டெல்லி செல்வது இதுவே முதல் முறையாக இருக்கும்.