கர்நாடகாவில் வறட்சி.. ரூ.4,702 கோடி நிதி தேவை - மோடியிடம் சித்தராமையா நேரில் வலியுறுத்தல்
கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.
டெல்லி: வறட்சி நிவாரண நிதியாக 4,702 கோடி ரூபாய் நிதியை கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பலமுறை தாம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் மோடி, அனுமதி அளிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான குழுவினர் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து மோடியிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், சதானந்த கவுடா, அனந்குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை. இதனால் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.4,702 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications