வீட்டை காலி செய்கிறார் மன்மோகன் சிங் - ஷீலா தீட்சித் வீட்டுக்குக் குடிபெயர்கிறார்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசாங்க வீட்டை காலி செய்து விட்டு முன்பு முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வசித்து வந்த பங்களாவில் குடியேற உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தனது வீட்டை காலி செய்துவிட பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் நம்பர் பங்களாவில் குடியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பே மீண்டும் வாய்ப்பு கிடைத்தாலும் பிரதமர் பதவியில் அமர மாட்டேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவருடைய பிரதமர் பதவிக்காலம் முடிவடைந்த பின்பு மன்மோகன் சிங்கிற்கு வேறு இடத்தில் அரசு பங்களாவை ஒதுக்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி மோதிலால் நேரு மார்க்கில் உள்ள அரசு பங்களாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த பங்களாவில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் குடியிருந்தார். 1920 ஆம் ஆண்டு சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அந்த பங்களா நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட டைப் 3 வகையை சேர்ந்தது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை வட்டாரம் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் குடும்பத்தினர் அந்த பங்களாவை பார்த்து அங்கு குடியேற விருப்பம் தெரிவித்தனர். பங்களாவை புதுப்பிக்கும் பணி ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கு ரூ.35 லட்சம் செலவானது" என்றனர்.
தற்போது 5 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மன்மோகன் சிங்கிற்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications