ஆப்கன் அதிபருக்கு மன்மோகன் சிங் வாழ்த்து
டெல்லி: ஆப்கானிஸ்தானில் முதல்கட்ட தேர்தலை வெற்றிகரமாக நடத்திய அதிபர் ஹமீது கர்சாய்க்கு, பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசி மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தொடர்ந்து, இந்திய பிரதமரும் ஆப்கன் அதிபரை வாழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாழ்த்து தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாயின் தனிப்பட்ட தலைமைத்துவம், பிரச்சனைகளை எதிர்கொள்வதில் தைரியம், ஆப்கானிஸ்தான் மக்களின் உறுதியான மனநிலை ஆகியவை தீவிரவாதம் மற்றும் வன்முறையை தோற்கடித்து விட்டன. ஜனநாயக ரீதியிலான நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவையும், உதவியையும் வழங்கி வரும் இந்தியாவுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அதிபர் கர்சாய் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கன் மக்கள் இந்தியாவை ஒரு உண்மையான நண்பனாக கருதுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2001 ஆம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னால் ஜனநாயக முறைப்படி அதிபராகப் பொறுப்பேற்ற ஹமீத் கர்சாயின் 13 ஆண்டு பதவிக் காலம் இந்த தேர்தலில் மூலம் முடிவுக்கு வரவுள்ளது. தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.