பிரதமருக்கு கிட்டப்பார்வை அதான் மோடி அலையை பார்க்க முடியவில்லை: அருண் ஜேட்லி
அமிர்சரஸ்: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கிட்டப்பார்வை போன்று. அதனால் தான் அவரால் மோடி அலையை பார்க்க முடியவில்லை என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மோடி அலையை மீடியாக்கள் தான் உருவாக்கியுள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில்,
பிரதமருக்கு கிட்டப் பார்வை போன்று. அதனால் தான் அவரால் மோடி அலையை பார்க்க முடியவில்லை. இல்லை எனில் மோடி அலையை பார்த்தும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். வெளியேறவிருக்கும் அரசு தங்களின் சாதனைகளை பற்றி பேசாமல் பிறரின் குறைகளை கூறுவதை நான் இப்போது தான் முதல்முறையாக பார்க்கிறேன்.
எதிர்கட்சிகள் மீது குறைகூறி தங்களின் தோல்வியை மறைக்க ஆளுங்கட்சி முயல்வது அரிய விஷயம் ஆகும். மோடிக்கு இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் அமோக ஆதரவு உள்ளது. அதனால் அப்பகுதிகளில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். காந்திகளுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது என்றார்.