எப்போதும் இந்தியில்தான் பேசுகிறார் மோடி, ஐ.நா.விலும் அப்படித்தான் பேசுவார்.. ராஜ்நாத் சிங்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இன்று இந்த விவரத்தை டெல்லியில் நடந்த இந்தி தின விழாவின்போது தெரிவித்தார்.
அடல் பிகாரி வாஜ்பாய்க்குப் பிறகு ஐ.நா. கூட்டத்தில் இந்தியில் பேசும் முதல் பிரதமர் மோடிதான் என்றும் கூடுதல் தகவலைத் தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.
இந்தியைப் பிடித்துத் தொங்கும் பாஜக
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துள்ளது.
குஜராத்தி என்பதை மறைக்க இந்தி ஆர்வமா???
பிரதமர் மோடியும் கூட, தன்னை எங்கே குஜராத்தி என்று எதிர்க்கட்சியினர் மறைமுகப் பிரசாரம் செய்து விடுவார்களோ என்ற எண்ணத்தில், இந்தியிலேயேதான் பேசுகிறார், இந்தியில்தான் எல்லாவற்றையும் மேற்கொள்கிறார்.
ஐ.நா.விலும் இந்தி
இந்த நிலையில், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி அங்கு இந்தியிலேயே பேசவுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நானும் பேசியுள்ளேன்
இதுகுறித்து டெல்லியில் நடந்த இந்தி தின விழாவின்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், நானும் கூட முன்பு அமைச்சராக இருந்தபோது ஐ.நா கூட்டத்தில் இந்தியில் பேசியுள்ளேன். நமது பிரதமரும் தற்போது இந்தியில் பேசப் போகிறார்.
எப்பவும் இந்தியில்தான் பேசுகிறார்
இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள், பிரமுகர்களுடனான சந்திப்பின்போதும் கூட பிரதமர் இந்தியில்தான் பேசுகிறார் என்றார் ராஜ்நாத் சிங்.
செப்டம்பர் 27ல்
செப்டம்பர் 27ம் தேதி பிரதமர் மோடி ஐ.நா. கூட்டத்தில் பேசுவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
55 சதவீதம் பேர் இந்தியில்தான் பேசுகிறார்கள்
சிங் மேலும் பேசுகையில், நாட்டில் 55 சதவீத மக்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். 85 முதல் 90 சதவீதம் பேர் இந்தியைப் புரிந்து கொள்கிறார்கள். அது அவர்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியைப் பரப்பிய காந்தி - கோபாலசாமி அய்யங்கார்
மகாத்மா காந்தி, கோபால சாமி அய்யங்கார், பாலகங்காதர திலகர், ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றோர் தங்களது தாய் மொழி வேறாக இருந்தாலும் கூட இந்தியைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர்.
நாட்டின் பொது மொழி இந்தி
இந்தி நாட்டின் பொது மொழியாக திகழ்கிறது. இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் தாய் மொழியாக சமஸ்கிருதம் விளங்குகிறது என்றார் அவர்.