முஸ்லிம்களின் வக்பு சொத்துகளை அனுபவிக்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்- மோடி பகீர் குற்றச்சாட்டு!
டெல்லி: முஸ்லிம்களின் வக்பு வாரிய சொத்துகளை ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்தான் அனுபவித்து வருகின்றனர்; மத்திய பாஜக அரசின் புதிய வக்பு வாரிய சட்ட திருத்தமானது, ஏழை- தலித்- பழங்குடி மக்களின் நிலம் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹரியானாவின் ஹிசாரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஹில்சாரில் இருந்து உ.பி. மாநிலம் அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. மேலும் ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. யமுனாநகரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
ஹிசார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி அழித்து நிர்மூலமாக்கி வருகிறது. அண்ணல் அம்பேத்கர் சமூக சமத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, வாக்கு வங்கி அரசியல் எனும் வைரஸை பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு ஏழையும் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கனவு கண்டார்.

தலித்துகளை இரண்டாம் தர குடிமக்களாக நடத்திய காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தலித்- பழங்குடி மக்களுக்கு எதுவுமே செய்யப்படவில்லைதலித் மற்றும் பழங்குடி மக்களை காங்கிரஸ் கட்சி இரண்டாம் தர குடிமக்களாக மட்டுமே நடத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகளின் கதவுகள் எதுவும் தலித் -பழங்குடி மக்களுக்காக திறக்கப்படவும் இல்லை. ஆனால் இப்போது ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் நாட்டின் ஒடுக்கப்பட்ட- தலித்- பழங்குடி- பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
வக்பு வாரிய சொத்துகளை அனுபவிக்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்
இந்த நாட்டில் வக்பு வாரியத்தின் பெயரில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வக்பு வாரிய நிலத்தால், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் மட்டுமே ஆதாயம் அடைகின்றனர். மத்திய அரசின் வக்பு சட்டத்தால், நிலம் கொள்ளையைடிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களை சுரண்டுவது தடுக்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்தத்தால் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் நிலம் மீது யாரும் கை வைத்துவிட முடியாது. ஏழை முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான சமூக நீதி.
அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ்
அண்ணல் அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அண்ணல் அம்பேத்கர் உயிருடன் இருந்தபோது அவரை தோற்கடித்தது காங்கிரஸ்தான். இரு முறை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் தோற்கடித்தது; அவரது பணத்தை எல்லாம் அழித்ததும் காங்கிரஸ்தான். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து இடங்களிலும் அழித்துவிட துடிப்பதும் காங்கிரஸ்தான். நாட்டின் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை நிர்மூலமாக்கி அழிக்கும் சக்தி.
வீடுகளுக்கு குடிநீர் கொடுத்த பாஜக
காங்கிரஸ் தலைவர்கள், நீச்சல் குளங்களில் நீந்திக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க ஏழை மக்களுக்கு குடிக்க கூட குடிநீர் கிடைக்காமல் இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில்தான் 100-க்கு 80 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனமும் காங்கிரஸும்
அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் சாசனத்தை ஒரு கருவியாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அதிகாரம் தங்களது கைகளை விட்டுப் போகும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சி, இந்திய அரசியல் சாசனத்தை கையில் எடுத்துக் கொள்ளும். அவசர நிலை பிரகடன காலத்திலும் இதைத்தான் செய்தது காங்கிரஸ்.
பொது சிவில் சட்டம்
அனைத்து குடிமக்களுக்குமான ஒரே சிவில் சட்டம்- பொது சிவில் சட்டத்தை- மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை அரசியல் சாசனம்தான் வலியுறுத்துகிறது. காங்கிரஸ் கட்சி இதனை ஒருபோதும் அமல்படுத்தியது இல்லை. தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் பொது சிவில் சட்டத்தை இப்போதும் எதிர்க்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications