27 நக்சலைட்கள் சுட்டுக்கொலை.. மாவோயிஸ்ட் இயக்க முன்னணி தலைவரும் பலி.. பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச் செயலாளரான பசவராஜூ உட்பட 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, பாதுகாப்பு படையினரை பாராட்டி உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நக்சல் இயக்கத்திற்கு முதுகெலும்பாகவும், மாவோயிஸ்ட் பொதுச் செயலாளருமான பசவராஜு என்கிற நம்பலா கேசவ் ராவ் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். அமித் ஷா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போரில் இது ஒரு முக்கியமான சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் 27 பயங்கரமான மாவோயிஸ்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
அவர்களில் சிபிஐ - மாவோயிஸ்ட்டின் பொதுச் செயலாளரும், உயர்மட்டத் தலைவரும், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்புமான நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜுவும் அடக்கம். நக்சலைட்களுக்கு எதிரான 30 ஆண்டுகாலப் போராட்டத்தில், பொதுச் செயலாளர் அந்தஸ்துள்ள ஒரு முக்கிய தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை." என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்" (Operation Black Forest) மூலம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் 54 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சலைட்டை ஒழிக்க மோடி அரசு உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பக்கத்தில், "பாதுகாப்பு படையினரின் இந்த வெற்றியால் பெருமிதம் கொள்கிறோம். மாவோயிசத்தின் அச்சுறுத்தலை ஒழித்து, நமது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்ற வாழ்க்கையை உறுதி செய்வதில் நமது அரசாங்கம் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications