மோடியைச் சந்தித்தார் இஸ்ரேல் முன்னாள் அதிபர்... இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை
டெல்லி: இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உலகத்திற்கே முன்னுதாரணமாக விளங்கக் கூடிய வாழ்க்கை வாழும் இஸ்ரேல் முன்னாள் அதிபர் பெரஸை சந்தித்தது தனக்கு மிகவும் கவுரவம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதே போல், பெரஸ் கூறுகையில், ‘இந்தியாவை இஸ்ரேல் எப்போதும் மூத்த சகோதரி போலவே பாவிக்கிறது. பிரதமர் மோடியும் இஸ்ரேலுடன் நட்பாக உள்ளார். மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பாதையில் இந்திய மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் தலைவராக மோடி திகழ்கிறார்' என அவர் தெரிவித்தார்.

பாராட்டு...
மேலும், மோடியின் தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பெரஸ், மோடியின் திட்டங்களையும் பாராட்டினார்.

இஸ்ரேல் பயணம்...
இந்தச் சந்திப்பின் போது, தான் குஜராத் முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தை நினைவு கூர்ந்தார் மோடி.

ஆலோசனை...
சந்திப்பின் போது மோடியும், பெரஸும் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு குறித்த இஸ்ரேல் - இந்தியா - ஆஸ்திரேலிய திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

நட்புறவு...
அதனைத் தொடர்ந்து விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இஸ்ரேல் உலக அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்த பெரஸ், ‘இருநாட்டு மக்களின் நலனைக் கருத்தில் எதிர்காலத்திலும் இந்த நட்புறவு தொடர வேண்டும்' என விருப்பம் தெரிவித்தார்.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை...
இந்தச் சந்திப்புத் தொடர்பாக இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இருநாட்டுத் தலைவர்களும் தீவிரவாதத்தை ஒழிப்பது, விவசாயம், தண்ணீர், மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்...
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் சென்றுள்ளநிலையில் பெரஸ், டெல்லி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications