பிரதமர் நரேந்திர மோடி இன்று அபுதாபி பயணம்...நாளை துபாயில் இந்தியர்களிடையே உரை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்குச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது இரண்டாவது பெரிய அரபு நாட்டின் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுக்கள் நடத்துவதுடன், ஐக்கிய அரபு எமிரேட்டின் மக்கள் தொகையில் 30 சதவிகிதமாக உள்ள இந்தியர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

எரிசக்தி மற்றும் வர்த்தகத்தில் அதிக ஒத்துழைப்பு குறித்தும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்துவதுடன், இந்தியாவை முதலீடுகளுக்கான உலகின் சிறந்த இடமாக மோடி எடுத்துக்காட்ட உள்ளார்.
மேலும் எரிசக்தி மற்றும் பாதுகாப்பில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவை மேம்படுத்த மோடி திட்டமிட்டுள்ளார். தனது அரபு பயணம் குறித்து விளக்கிய பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சை ஒரு மதிப்பு மிக்க கூட்டு நாடு என்று விவரித்துள்ளார்.
இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்டிஸ்சின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்குதாரராக திகழ்வதையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்குதாரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் 25 லட்சம் இந்தியர்கள் இருப்பதையும், அவர்களை சந்தித்துப் பேச ஆர்வத்துடன் இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
தனது பயணத்தின் முதல் கட்டமாக அபுதாபி செல்லும் பிரதமர் இளவரசர் ஷேக் முகம்மது் பின் சயித் அல் நஹ்யான் உடன் பேச்சவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து அங்குள்ள புகழ்பெற்ற மசூதிக்கும் அவர் செல்கிறார்.
நாளை (திங்கள்) அவர் அங்கிருந்து துபாய் செல்கிறார். துபாய் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரை சந்தித்துப் பேசும் மோடி, துபாய் கிரிக்கெட் மைதானத்தில் அங்கு வாழும் இந்தியர்களிடையே உரையாற்றுகிறார்.
34 ஆண்டுகளுக்கு முன் பயணித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் சிங்கப்பூரில் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் - இந்தியா இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 50 வது ஆண்டில் இந்திய பிரதமரின் சிங்கப்பூர் பயணத்தைஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகவும், இந்தப் பயணத்தின் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications