டெல்லியில் புழுதிப் புயல், கனமழை: ஜெய்பூருக்கு திருப்பிவிடப்பட்ட மோடியின் விமானம்
டெல்லி: டெல்லியில் பெய்த கனமழை மற்றும் புழுதிப் புயலால் பிரதமர் மோடியின் விமானம் ஜெய்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவனகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டம் முடிந்த பிறகு அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பிச் சென்றார்.
டெல்லியில் நேற்று மாலை புழுதிப் புயல் வீசியது. பின்னர் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்க வந்த பிரதமர் மோடியின் விமானம் உள்பட 27 விமானங்கள் ஜெய்பூர், லக்னோவுக்கு திருப்பி விடப்பட்டன.
மோடியின் விமானம் ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டது. அவரது விமானம் இரவு 9.15 மணிக்கு ஜெய்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் இரண்டு மணிநேரம் கழித்து அங்கிருந்து டெல்லிக்கு கிளம்பிச் சென்றது.
கனமழை, புழுதிப் புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இருப்பினும் பழைய டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்து சில கார்கள் சேதம் அடைந்துள்ளன.
திருப்பி விடப்பட்ட 27 விமானங்களில் 6 ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.