கும்பல் வன்முறை துரதிருஷ்டவசமானது.. அதை அரசியலாக்குவது வேதனை: பிரதமர் மோடி
கும்பல் வன்முறை துரதிருஷ்டவசமானது. அதை எதிர்க் கட்சிகள் அரசியலாக்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கும்பல் வன்முறைகள் துரதிருஷ்டவசமானது, அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் நாட்டில் நடைபெறும் கும்பல் வன்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி கும்பல் வன்முறை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "நானும் பாஜகவும் பல சந்தர்ப்பங்களில், பசுபாதுகாப்பு கும்பல் வன்முறை ஒரு குற்றம் என்று தெளிவாக கூறியிருக்கிறோம்.

கும்பலாக சேர்ந்து கொண்டு அப்பாவிகளை தாக்கி கொலை செய்யும் வன்முறை நடந்து வருவது வருந்ததக்கது. இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தாலும் அதனை ஏற்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபற்றி நானும், எங்கள் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்வதில் எங்கள் அரசு எப்போதுமே கவனத்துடன் செயல்படுகிறது. ஆனால், எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியாலாக்கப் பார்க்கின்றன. அவர்களது விபரீதமான சிந்தனையே இதற்கு காரணம்.
வன்முறை மற்றும் குற்றச்செயல்களை அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்கட்சிகள் இதை வைத்து அரசில் செய்வது வேதனையானது" என்று கூறினார்.
அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் 40 லட்சம் மக்கள் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, "பதிவேடு விவகாரத்தில் பொதுமக்களின் அனைத்து புகார்களும் கருத்துகளும் கவனமாக பரிசீலிக்கப்படும். எந்த ஒரு குடிமகனும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் எழாது" என்று உறுதியளித்தார்.
இந்தியாவில் உள்நாட்டுப் போருக்கான சூழலை பாஜக உருவாக்கியுள்ளது என்ற மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மோடி, "தம் மீதே நம்பிக்கை இழந்துவிட்டவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் உள்நாட்டு யுத்தம், ரத்த ஆறு ஓடும் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார்.
இட ஒதுக்கீடு குறித்து பாஜக அரசின் நிலைப்பாடு குறித்து பேசிய மோடி, "இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் திட்டம் தமது அரசுக்கு இல்லை. அது அப்படியே நீடிக்கும்" என்று தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மகா கூட்டணி அமைப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக அமைக்கப்படுகின்றன. இந்த கூட்டணி மக்களின் விருப்பத்துக்காக அல்ல." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications