ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ்
ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு என்றும் பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
டெல்லி: ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.
அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.
சபாநாயகர் ஒத்திவைத்தார்
பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
முணுமுணுத்த மோடி
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென இருக்கையில் இருந்து எழுந்து மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார். பின்னர் மோடியும் ராகுலை அழைத்து கை கொடுத்து காதில் ஏதோ முணுமுணுத்தார்.
பாஜக கூட்டணி எதிர்ப்பு
பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, மோடியை பார்த்து கண்ணடித்தார். ராகுலின் இந்த செயல்பாடுகளால் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
பிரதமருக்கு என்ன பாதுகாப்பு
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறுகையில் ராகுல் காந்தி யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கட்டி பிடித்திருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?
மருத்துவ பரிசோதனை
இது முழுக்க முழுக்க நெறிமுறையற்றது. எதிர்காலத்தில் இதுபோன்று நடவடிக்கை ஏற்படாமல் இருக்க வேண்டும். ராகுல் காந்தி கட்டி அணைத்ததாலேயே பிரதமர் மோடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.