திரிஷா பாணியில்.. மே.வங்கத்தில் திடீரென சாலையில் காரை நிறுத்தி பிரதமர் மோடி செய்த செயல்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று 4 பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த சமயத்தில் அவர் தனது வாகனத்தை விட்டு இறங்கி ஜார்கிராமில் உள்ள ஒரு சாலையோரக் கடையில் 'ஜால்முரி' வாங்கி பொதுமக்களுடன் கலந்துரையாடி சுவைத்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

'கில்லி' படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜியிடம் சிக்காமல் திரிஷாவை விமான நிலையத்துக்கு அவசரஅவசரமாக ஹீரோ விஜய் பஸ்சில் அழைத்து செல்வார். அப்போது விஜயிடம், திரிஷா 'காராப்பொறி' வேண்டும் என்று கேட்பார். இதையடுத்து விஜய் சாலையோர தள்ளுவண்டி கடையில் 'காராப்பொறி' வாங்கி திரிஷாவிடம் கொடுப்பார். பிரகாஷ் ராஜ் தங்களை தேடும் பரபரப்புக்கு நடுவே திரிஷா கூலாக 'காராப்பொறி'யை ருசிப்பார்.
அந்த வகையில் தான் தற்போது தேர்தல் பரபரப்புக்கு நடுவே பிரதமர் மோடி உள்ளூர் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோர கடையில் 'ஜால்முரி'வாங்கி சுவைத்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
மேற்கு வங்கத்தில் பாஜக தீவிரம்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் 23ம் தேதியும், அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 29 ம் தேதி 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் எப்படியாவது மம்தா பானர்ஜியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்பட பலரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று 4 பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நடுவழியில் காரை நிறுத்திய மோடி
ஜார்கிராம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு மோடி காரில் ஹெலிபேட் நோக்கி சென்றார். அப்போது பாதி வழியில் திடீரென்று காரை நிறுத்திய மோடி சாலையோர கடைக்கு சென்று வியாபாரியிடம் பேச்சு கொடுத்தார்.
'ஜால்முரி' சாப்பிட்ட மோடி
மேற்குவங்கத்தில் மிகவும் பிரபலமான 'ஜால்முரி' எவ்வளவு என்று கேட்டதோடு அதனை வாங்கினார். 'ஜால்முரி' வாங்கிய பிறகு மோடி கொடுத்த பணத்தை வியாபாரி வாங்க மறுத்தார். ஆனால் மோடி வலுக்கட்டாயமாக அவரிடம் பணத்தை கொடுத்தார். அதன்பிறகு 'ஜால்முரி'யை பக்கத்தில் இருந்த தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பகிர்ந்து மோடி சுவைத்தார். சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார்.
மோடி பகிர்ந்த வீடியோ
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ மற்றும் போட்டோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ''மேற்கு வங்கத்தில் நான் பங்கேற்ற நான்கு பேரணிகளுக்கு இடையே ஜார்கிராமில் சுவையான ஜால்முரி சாப்பிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி சுவைத்த 'ஜால்முரி' என்பது மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற சிற்றுண்டி வகை தின்பண்டமாக உள்ளது. பொரி, மசாலா, வெங்காயம், தக்காளி மற்றும் வேர்க்கடலை கலந்து 'ஜால்முரி' தயாரிக்கப்படும். இது மேற்கு வங்கத்தில் 'காரமான அவல்' என்றும் கூறப்படுகிறது.
முதல் முறையல்ல..
தேர்தல் பிரசாரங்களின்போது பிரதமர் மோடி இப்படி சாலையோர கடைகளின் உணவுகளை சுவைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது. இதற்கு முன்பு சாலையோர டீக்கடைகளில் பிரதமர் மோடி பலமுறை டீ குடித்துள்ளார். குஜராத், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் அங்குள்ள புகழ்பெற்ற உணவுகளை சாலையோர கடைகளில் அவர் சுவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications