Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசி தமிழ் சங்கமம்- சங்கிகளின் சங்கமம் என கடும் விமர்சனம்! நவ.18-ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு நிகழ்ச்சிதான் காசி தமிழ் சங்கமம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார்.

வாரணாசி என்று இன்று அழைக்கப்படும் காசி மிகப்பழமையான காலத்தில் இருந்தே தமிழகத்துடன் சிறந்த தொடர்பு கொண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. கங்கை நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்வதையும், அவர்கள் வழக்கமாக செய்து வந்துள்ளனர்.

தொடங்கி வைக்கும் மோடி

தொடங்கி வைக்கும் மோடி

இந்த வகையில் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் என்ற ஒரு மாத கால நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் மதியம் இரண்டரை மணியளவில் பனாரஸ் இந்து பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து தொடங்கி வைக்கிறார். ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், வாரணாசியை சேர்ந்த கலைஞர்களின் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

தமிழகத்தில் இருந்து பயணம்

தமிழகத்தில் இருந்து பயணம்

இதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக மாணவ - மாணவியரும் மற்றும் பலரும் சிறப்பு ரயில்கள் மூலம் வாரணாசிக்கு அழைத்து வரப்படவிருக்கிறார்கள். இதன் முதற்கட்டமாக ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்போரை ஏற்றிச் செல்லும் ரயிலை சென்னை எழும்பூரில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் ஆகியோர் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

தமிழகம்- காசி தொடர்புகள்

தமிழகம்- காசி தொடர்புகள்

தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. ஆன்மிக கவிஞர் குமரகுருபரர் வாரணாசிக்கு சென்று அங்கேயே அவரது சமாதி அமைந்திருப்பது, மகாகவி பாரதியார் தனது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் காசிக்கு வந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தது, 1819 ஆம் ஆண்டிலேயே நகரத்தார் சமூகத்தினரின் சத்திரம் ஒன்று அங்கு கட்டப்பட்டிருப்பது, தமிழகத்தில் வணங்கப்படும் தெய்வமான விசாலாட்சி அம்மனுக்கு அங்கு கோவில் அமைந்திருப்பது போன்ற பல்வேறு சான்றுகள் தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்கும் விதமாக அமைந்துள்ளன.

 என்ன நிகழ்ச்சிகள்?

என்ன நிகழ்ச்சிகள்?

இந்த தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இருமாநிலங்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும், தற்போது வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் டிஜிட்டல் கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், சுதந்திர வேட்கையை உருவாக்கிய திரைப்படங்கள், தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்டோர் பற்றிய தகவல்கள் டிஜிட்டல் முறையில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தவிர, கலாச்சாரம், கல்வித்துறை, பதிப்பகங்கள் என பல்வேறு துறையினரும், கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளனர். ஒரு மாத காலத்திற்கு வாரணாசிக்கு வரக்கூடிய தமிழக மக்கள் மற்றும் வாரணாசியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை கண்டு களிக்க இயலும்.

சங்கிகளின் சங்கமம்- கி.வீரமணி

சங்கிகளின் சங்கமம்- கி.வீரமணி

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியானது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கிற முகாம் என தமிழகத்தில் இந்துத்துவா எதிர்ப்பு கட்சிகள் தெரிவித்துள்ளன. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் முழுக்கவும் ஒரு மதச்சார்புடைய நிகழ்ச்சியாகவே காசி சங்கமம் திட்டமிடப்பட்டுள்ளதே! பண்பாடு என்றால் அது மதம்தானா? மதத்தைப் பண்பாடாகவும், கடவுள் நம்பிக்கையை (அவர்கள் சொல்லில் - ஆன்மீகத்தை) தத்துவமாகவும், புராண, இதிகாசங்களை வரலாறாகவும் காட்டிடும் ஆர்.எஸ்.எஸ். வித்தைதானே இது! 2500 பேர் செல்ல இருக்கிறார்களாமே! அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்? அங்கே நடக்கவிருப்பது மறைமுக ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமா? பங்கேற்பாளர்களை இந்துத்துவச் சிந்தனைக்கு மடைமாற்றும் முயற்சியா? யாருடைய இன்பச் சுற்றுலா இந்தப் பயணம்? தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தொடர்பைப் பேசுவதற்கான நிகழ்வு என்றால், இதில் தமிழ்நாடு அரசு, அதன் பண்பாட்டுத் துறையின் பங்களிப்பு என்ன? கலந்து ஆலோசித்தனரா? தமிழ்நாடு அரசைத் தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேசப் போகிறோம் என்றால், அதன் உள்நோக்கம் என்ன? ஆளுநர் நடத்த விரும்பும் தனி ஆவர்த்தனத்திற்கு ''அய்.அய்.டி. தாளமிடுகிறதா?'' ராஜ்பவனும், அய்.அய்.டி.யும், இருக்கும் சாலை சர்தார் படேல் சாலை என்பதால் ஏதோ, தனியாகத் தனது எதேச்சதிகார எல்லையில் இருக்கின்றது என தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் போலும் ஆளுநர்! இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். சிந்துவெளி நாகரிகம் - திராவிட நாகரிகம் - கீழடி ஆய்வுகள் இவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இந்த சங்கமம் வெறும் சங்கிகளுக்கான சங்கமமா? என்ற கேள்வியே எழும்புகிறது என கூறியிருந்தார்.

 ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா?

ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா?

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவும் காசி சங்கமம் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் மிக முக்கிய கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி யில், கடந்த சில நாள்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில உயர்கல்விதுறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை விவாதிக்கப் படவில்லை. மாநில அரசின் எந்த ஒரு பங்களிப்பும் இருப்பதாக தெரியவில்லை. மாநில அரசும் இத்தகைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது ஆச்சர்யமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்விதுறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் இதர ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சி மூலமான பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+