குஜராத்தில் கிடைத்த உற்சாக வரவேற்பு.. பூரித்து போன மோடி! ரூ.48 ஆயிரம் கோடி திட்டங்கள் தொடங்கி வைப்பு
அகமதாபாத்: பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அங்கு ரயில்வே, எரிசக்தி, சுகாதாரம், இணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் ரூபாய் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால், பல்வேறு நலத்திட்ட பணிகளையும் மத்திய அரசு விரைவுபடுத்துகிறது.

பிரதமர் மோடியும் நாடு முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த மாத இறுதியில் தமிழ்நாட்டுக்கும் வருகை தருகிறார். வரும் 28 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகை தருகிறார்.
ரூ.48 ஆயிரம் கோடி: தேர்தல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என படு பிசியாக பிரதமர் மோடி தனது பயண திட்டங்களை வகுத்து வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தந்தார்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா அகமதாபத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து ரயில்வே, எரிசக்தி, சுகாதாரம், இணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் ரூபாய் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரமாண்ட பொதுக்கூட்டம்: இன்று காலை 10.45 மணியளவில் அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி, குஜராத் பால் கூட்டுறவு அமைப்பின் பொன்விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "அமுல் என்றாலே நம்பிக்கை, வளர்ச்சி, உத்வேகம், கனவுகளை உள்ளடக்கியது. வலிமையின் அடையாளமாக அமுல் மாறியுள்ளது" என்றூ பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு 12.45 மணிக்கு மஹேசனா சென்ற பிரதமர் மோடி அங்குள்ள மகாதேவ் கோவிலில் பூஜைகள் மற்றும் தரிசனம் மேற்கொண்டார்.
நண்பகல் 1 மணியளவில் மஹேசனாவின் தர்பா பகுதியில் நடைற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில், ரூ.8,350 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் நவ்சாரி சென்ற பிரதமர் மோடி, முடிவு பெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கக்ரபார் அணு மின் நிலையம் சென்ற பிரதமர் மோடி அங்கு முடிவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி அருகே உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications