2 நாள் பயணமாக இன்று கர்நாடகா வருகிறார் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பெங்களூர் : 2 நாள் பயணமாக இன்று கர்நாடகா வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று கர்நாடகா வருகிறார். விமானம் மூலம் இன்று மாலை மைசூர் வரும் நரேந்திர மோடி, அங்குள்ள, கணபதி சச்சிதானந்த சுவாமியின் அவதூத தத்த பீடத்திற்கு செல்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை திறந்து வைக்கும் மோடி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் சுத்தூர் மடத்தின் மறைந்த சிவராத்திரி ராஜேந்திரா மகாசாமியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்த விழாவை முடித்துக் கொண்டு மோடி இரவு மைசூரில் தங்குகிறார். அவர் நாளை மைசூர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகா நிட்டுர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமையும் எச்.ஏ.எல். நிறுவனத்தின் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவு விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் பிறகு பெங்களூரு அருகே ஜிகினியில் நடைபெறும் சர்வதேச யோகா ஆராய்ச்சி மாநாட்டு விழாவை மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மைசூர், துமகூர் மற்றும் பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications