3 நாள் பயணமாக... ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த கையோடு பிரதமர் மோடி இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரதமரின் 3 நாள் ஜப்பான் பயணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜப்பானில் 10 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் ஜப்பான் பயணம் மேற்கொள்கிறேன்.
அங்கு இருநாடுகளின் முக்கிய வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து தொழில் மற்றும முதலீடு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். ஜப்பானுடனான இந்தியாவின் உறவு சிறப்பு வாய்ந்த ராஜதந்திரத்துடனும் சர்வதேச கூட்டாண்மையுடனும் உருவாக்கப்பட்டதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் செல்லும் மோடி அங்கு அந்நாட்டு மன்னர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் பிரதமர் அபேவுடன் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயிலில் கோபே நகருக்கு செல்கிறார். மேலும் அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யும் கவாஸ்கி ராயில் தொழிற்சாலையை அவர் பார்வையிடுகிறார்.
இந்தப் பயணத்தின் போது அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பிரதமராக பதவியேற்றதற்கு பின் இரண்டாவது முறையாக தற்போது ஜப்பான் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.