குஜராத்தில் தேஜா-வூ.. 4 வருஷம் முன்னாடி நடந்த மாதிரியே மறுபடியும் நடக்குதே!
காந்திநகர்: குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. 2027 ல் மீண்டும் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் முதல்வராக இருக்கும் பூபேந்திர படேலை தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர். குஜராத்தில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. மறைந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவை திடீரென்று கடந்த 2021ம் ஆண்டில் இதேபோல் ராஜினாமா செய்தது. இப்போதும் அதேபோன்ற சம்பவம் குஜராத்தில் நடந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத். கடந்த 1998 ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாஜக தான் ஆட்சியில் உள்ளது. இதனால் தான் குஜராத் பாஜகவின் கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் உள்ளார். குஜராத் அமைச்சரவையை எடுத்து கொண்டால் முதல்வர் பூபேந்திர படேல் உள்பட மொத்தம் 17 பேர் அமைச்சர்களாக இருந்தனர்.

இந்நிலையில் தான் இன்று முதல்வர் பூபேந்திர படேலை தவிர அனைத்து அமைச்சர்களும் தங்களின் பதவிகளை திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர். அங்கு சட்டசபைத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்ததாக 2027 டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும்.
இந்நிலையில் தான் இன்று அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதன் பின்னணி என்னவென்றால் அமைச்சரவையை புதிதாக அமைக்க வேண்டும் என்பது தான். குஜராத்தில் பாஜக தனது செல்வாக்கை நிலைநிறுத்தவும், இளம் தலைவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால் தற்போதைய அமைச்சர்களுக்கு பதில் புதியவர்களை அமைச்சராக்கப்பட உள்ளனர்.
அதன்படி நாளை புதிய அமைச்சரவை அமைய உள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 2027 சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும், அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத்தை எடுத்து கொண்டால் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது.அதாவது
குஜராத்தில் கடந்த 1998 ம் ஆண்டு முதல் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. 27 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 3 முறை குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்தார்.
கடந்த 1998 ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பாஜகவின் முதல்வராக கேசுபாய் படேல் இருந்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து பிரதமர் மோடி முதல்வரானார். 2001 அக்டோபர் 7 ல் முதல் முறையாக முதல்வரான நரேந்திர மோடி 2014 மே 22ம் தேதி வரை தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2014ல் பிரதமராக பொறுப்பேற்க மோடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மோடியை தொடர்ந்து அனந்திபென் படேல் முதல்வராானர். இவர் 2014 மே 22 முதல் 2016 ஆகஸ்ட் 7 வரை 2 ஆண்டுகள் 77 நாட்கள் முதல்வராக இருந்தார். இவர் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆவார். தேர்தலுக்கு ஓராண்டு இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். தனது 75 வயதை காரணம்காட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சரவை கலைக்கப்பட்டது.
அனந்திபென் படேல் ராஜினாமாவை தொடர்ந்து விஜய் ரூபானி (அகமதாபாத் விமான விபத்தில் சமீபத்தில் மரணம் அடைந்தவர்) முதல்வரானார். இவர் 2016 ஆகஸ்ட் 7 முதல் 2021 செப்டம்பர் 13 வரை முதல்வராக தொடர்ந்தார். 2022ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் அவர் திடீரென்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து பூபேந்திர படேல் முதல்வராக பொறுப்பேற்றார். 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற நிலையில் மீண்டும் பூபேந்திர படேல் 2வது முறையாக முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறது. தற்போது மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பூபேந்திர படேலை தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இது குஜராத்தின் ‛தேஜா வூ' என்று அழைக்கப்படுகிறது. ‛தேஜா வூ' என்பது ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்ததை நினைவுப்படுத்துவதாகும். தற்போது குஜராத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டில் விஜய் ரூபானியின் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ததை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.
குஜராத்தில் நரேந்திர மோடிக்கு பிறகு முதல்வராக பொறுப்பு வகித்த அனந்தி பென் படேல், விஜய் ரூபானி, தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டவர்கள் முழுமையாக 5 ஆண்டு முதல்வர் பதவியை வகித்தது இல்லை. அனந்தி பென் படேல், விஜய் ரூபானி ஆகியோர் பாதியில் முதல்வராகி பாதியில் வெளியேறியவர்கள். மோடிக்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் முதல்வர்கள் மாற்றப்படுவதால் பாஜக அதிருப்தியை சமாளித்து வாகைசூடி வருகிற. அந்த வகையில் தான் 2027 சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும், அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கத்தில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications