'தேடப்படும் குற்றவாளி'க்கு சுஷ்மா, வசுந்தரா உதவிய விவகாரம்: மோடியுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை!!
டெல்லி: ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு விசா பெற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தால் எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மோடியும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தீவிர ஆலோசனை நடத்தினர்.
லலித் மோடி விசா விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் சுஷ்மாவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக எவரும் கருத்து தெரிவிக்கவில்லை.
இத்தகைய நிலையில், நேற்று பஞ்சாப்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங், அமித் ஷாவுடன் இணைந்து வசுந்தராவும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு செல்வதை புறக்கணித்துள்ளார் வசுந்தரா. முன்னதாக வசுந்தரா ராஜே, அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அமித் ஷா சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு விசா பெற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சரி செய்வது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.