இந்திராகாந்தி 100- வது பிறந்தநாள்: நினைவிடத்தில் மோடி, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை #indira100
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மோடி, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லி: நாட்டின் ஆளுமை மிக்க பிரதமர்களில் ஒருவராக திகழ்ந்த மறைந்த இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள இந்திரா நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தெற்காசியாவின் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த இந்திரா காந்தி 1917ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி பிறந்தார். இந்திராவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி ஓராண்டு காலம் அடுத்த ஆண்டு நவம்பர் 19- வரை நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் இந்திரா பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்கியது. இன்று காலை டெல்லியில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நினைவிடத்தில் மோடி மரியாதை
Tributes to former Prime Minster Smt. Indira Gandhi on her birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 19, 2016
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி புகழாரம் சூட்டியுள்ளார். பின்னர் இந்திரா நினைவிடத்திற்குச் சென்ற மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில்..
சென்னையில் இன்று காலையில் தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் யானைக்கவுனியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடன் இணைந்து பணியாற்ற துணை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.